சனி, 18 ஏப்ரல், 2015

தமிழகத்திற்கு எதிராக செயல்படும் இந்திய தேர்தல் கட்சிகள்



      காவிரிக்கு குறுக்கே மேகதாது என்றபகுதியில் கர்நாடக அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதன் ஆய்வுப்பணிக்காக  நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு செல்லும் காவிரி நீர் தடுக்கப்படும். தமிழகத்தில் சில கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.

       தமிழகத்தின் எதிர்ப்பால் கோபமடைந்துள்ள கர்நாடகாவும், பதிலுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்தது. கர்நாடக ரக்ஷனாவேதிகே, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி உள்ளிட்ட கன்னட அமைப்புகள் மற்றும், கன்னட  திரைப்பட வர்த்தக சபை, டாக்சி ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட 500 அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பாரதீய ஜனதா, காங்கிரச் உள்ளிட்ட இந்திய கட்சிகள் கன்னட அமைப்புகள் நடத்திய இந்த போராட்டத்தில் பங்கெடூத்துக் கொண்டனர்.

   மேகதாது தடுப்பு அணை  விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் 500 அமைப்புகள் சார்பில் இன்று வேலைநிறுத்தம்     காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. மாலை 6 மணிவரை பந்த் நடைபெற்றது. பொதுவாக காவிரி விவகாரங்களில் வட கர்நாடக மக்கள், பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எனவே, தென் கர்நாடகாவின், பெங்களூரு, ராம்நகரம், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், கோலார், துமகூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில், போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திரைப்பட வர்த்தகசபை  ஆதரவு தெரிவித்திருப்பதால், கன்னட திரைப்பட நடவடிக்கைகள் நடைபெறவில்லை. அரங்குகளில் திரைப்படங்கள் காண்பிக்கப்படவில்லை.  கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்திருந்ததால், தமிழகத்துக்கு பேருந்துகள்  இயங்கவில்லை. எனவே, தமிழகம்-கர்நாடகா இடையேயான போக்குவரத்து இன்று பகல் முழுவதும் நடைபெறவில்லை. விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள், அங்கேயேகாத்திருக்கவேண்டியதாயிற்று.

    

இந்நிலையில், மைசூருவில் இன்று சிவராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவின் நிலம், நீர், மொழி விவகாரங்களில் கன்னட திரையுலகம் எப்போதும் ஆதரவு தந்து வந்துள்ளது. மேகதாது விவகாரத்திலும், கன்னட திரையுலகம் தனது ஆதரவை அளிக்கும். மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கன்னட திரையுலகம் சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும். எந்த மாதிரி போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று நான் கூற மாட்டேன். நாட்டு நலனுக்காக நடைபெறும் போராட்டம், ஒருவரது தலைமையில் நடைபெற கூடாது. கூட்டு தலைமையின் கீழ் அந்த போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.
  

ஆனால்  தமிழகத்தில் உள்ள இந்திய தேர்தல் கட்சிகள் தமிழக மக்களின் ஆற்றுநீர்(காவிரி, பெரியாறு, பாலாறு, பவானியாறு) உரிமைக்காக என்றுமே குரல் கொடுத்த்தில்லை. சிலர் இரட்டைவேடம் போடுகிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன்,நீயூட்ரினோ, அணுஉலை, ஸ்டெர்லைட்ஆகிய திட்டங்களை ஆதரிக்கிறார்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக